“உதயநிதியின் கரத்தை வலுப்படுத்துவேன்” - முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி

By KU BUREAU

விழுப்புரம்: கருணாநிதியின் தொண்டனாக, ஸ்டாலினின் நண்பனாக இருந்து, தமிழகத்தின் செல்லப்பிள்ளையான உதயநிதியின் கரத்தை வலுவூட்டும் வகையில் நானும் அவருடன் கை கோர்ப்பேன் என முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி செயல் வீரர்கள் கூட்டம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திலகவதி விஜயகுமார் தலைமையில் நேற்று செஞ்சியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சேகர், மாவட்டஅவைத்தலைவரான செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ, மகளிரணி மாநில நிர்வாகி தமிழரசி ரவிக்குமார் எம்எல்ஏ, அமலு விஜயன்எம்எல்ஏ, தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா, முன்னாள் எம்எல்ஏக்கள் மாசிலாமணி, சேதுநாதன், சீத்தாபதி சொக்கலிங்கம், செந்தமிழ் செல்வன், செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழரசி ரவிக்குமார் பேசுகையில், “ஒவ்வொரு மாவட்டமாக மகளிரணியை சந்தித்து வருகிறோம். எப்போதும் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த நாம், இப்போது மேடையில் அமர்ந்துள்ளோம். பெண்கள் ஆளுமையோடு இருக்கவேண்டும் என்று நினைத்து செயல்படும் இயக்கம் திமுக. நம் குடும்பத்தில் கூட, நம் உரிமைகளை பேச முடியாது. இங்கு நம் கருத்துகளை மேடையேறி சொல்ல முடிகிறது.

பெண்கள், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள திமுக அரசு இலவச தொலைக்காட்சிகளை கொடுத்தது. பெண்கள் கூடுதல் பொறுப்போடு வாங்கிய கடனை செலுத்துவதால்தான் பெண்களுக்கு வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கடன் வழங்குகிறது” என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற மஸ்தான் எம்எல்ஏ பேசுகையில், “ பெரியாரின் கனவுடன், பாரதி கண்ட புதுமைப் பெண்களை உருவாக்கி வரும் மு.க.ஸ்டாலின், முதல்வராக சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். கருணாநிதியின் தொண்டனாக, ஸ்டாலினின் நண்பனாக இருந்து, தமிழகத்தின் செல்லப்பிள்ளையான உதய நிதியின் கரத்தை வலுவூட்டும் வகையில் நானும் அவருடன் கை கோர்ப்பேன்.

முன்பெல்லாம் மாதத்தில் ஓரிரு நாட்கள் உங்களை சந்தித்து வந்தேன். இனி தினமும் உங்களை சந்திப்பேன். இனி வரும் காலங்களில் நாள்தோறும் 18 மணி நேரம் உங்களோடு இருப்பேன்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE