காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளர்கள் சாலை மறியல்: 400 பேர் கைது; போக்குவரத்து பாதிப்பு

By KU BUREAU

காஞ்சிபுரம்/செங்கல்பட்டு: காஞ்சிபுரத்தில் மறியலில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் 400 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழில் நிறுவனத்தில் சிஐடியூ சார்பில் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தொழிலாளர் துறை உட்பட பல்வேறு தரப்பினருடன் நடைபெற்ற பேச்சுவார்தைகள் தோல்வியில் முடிந்தன.

இந்தச் சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வர தொழிலாளர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் அங்கிருந்து பல்வேறு வாகனங்களில் வந்த தொழிலாளர்களை ஆங்காங்கே போலீஸார் மடக்கி கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சாம்சங் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்தனர். போலீஸார் இவர்களின் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்யலாம் என்பதால் இந்த முறை தொழிலாளர்கள் மொத்தமாக வரவில்லை. சீருடை அணியாமல் பத்து பத்து பேராக பிரிந்து காஞ்சிபுரம் வந்தனர்.

தனித் தனியாக பல்வேறு இடங்களில் நின்றிருந்தனர். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மொத்தமாக சுமார் 400-க்கும் மேற்பட்டோர் காந்தி சிலை அருகே திரண்டனர்.

இதனை சற்றும் எதிர்பாராத போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்த திணறியதால் கூடுதல் போலீஸார் காந்தி சாலைக்கு வரவழைக்கப்பட்டனர். அதற்குள் தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 20 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு சார்பில் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் மறியல் போராட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட தலைவர் சேஷாத்திரி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE