தஞ்சை பெரிய கோயில் அருகே சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி: தொல்லியல் துறை மீது ஐகோர்ட் அதிருப்தி

By கி.மகாராஜன்

மதுரை: தஞ்சை பெரிய கோயில் அருகே சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கியதற்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சின்ராஜ், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘விவசாயிகள் நல்ல மழை, விளைச்சல், செல்வம், செழிப்புக்காக வழிபடும் இறைவனாக இருப்பவர் இந்திரன். தஞ்சை பெருவுடையார் கோயிலின் கிழக்குப் பகுதியில் இந்திரன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக மூடப்பட்டும், பூஜைகள் நடைபெறாமலும் உள்ளது. தற்போது பராமரிப்பு குறைபாடு காரணமாக, கோயில் சேதமடைந்துள்ளது. எனவே, இந்திரன் கோயிலை திறந்து நாள்தோறும் பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு, முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பில், “இதுபோன்ற கோரிக்கையுடன் இன்னொரு வழக்கு நிலுவையில் உள்ளது. 2008-ல் தேவஸ்தானம் தரப்பில் புதிய சிலையை வைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், “தஞ்சை பெருவுடையார் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில்கள் தொல்லியல்துறை பொறுப்பில் உள்ளன. இந்தக்கோயில்களை பாதுகாப்பது தொல்லியல் துறையின் கடமை. ஆனால், தஞ்சை பெருவுடையார் கோயிலில் இருந்து 20 மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்தால் ஏராளமான கனரக வாகனங்கள் அப்பகுதியை கடந்து செல்லும். இதனால் வருங்காலத்தில் கோயிலின் நிலை என்னவாகும் என யோசிக்கவில்லை.

பழங்கால நினைவுச் சின்னங்களை அல்லாமல் கல்லறைகளை பாதுகாக்கவே தொல்லியல் துறை உள்ளது போல் தெரிகிறது. மனு தொடர்பாக தமிழக அரசு, அறநிலையத் துறை முதன்மைச் செயலர் தொல்லியல் துறை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை அக்.21க்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE