அண்ணாமலை வெளிநாட்டில் நன்றாக கல்வி கற்று தமிழகத்திற்கு வர வேண்டும், தலைவர்களைப் பற்றி எப்படி பண்புடன் பேச வேண்டும் என்பதை வெளிநாட்டில் அண்ணாமலை கற்று வரவேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை பரவை ஊர்மெச்சிக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறவில்லை, கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி தரவில்லை. கள்ளச்சாராய மரணங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்தான் முழு பொறுப்பு. கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஏன் நேரில் செல்லவில்லை? கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் விதி எண் 56-ன் படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால், விதி எண் 56-ன் படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார். சட்டம், விதிமுறைகள் அனைவருக்கும் சமம்தானே?
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரினார், கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மடியில் கனமில்லை என்றால் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்யலாமே? சட்டப்பேரவை கண்ணியத்தை காக்கும் விதமாக கள்ளச்சாராய மரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து வெளியேறினோம், நாங்கள் எங்களுடைய சட்டைகளை கிழித்துக்கொண்டு சட்டப்பேரவையிலிருந்து வெளியேறவில்லை.
அரசு விற்பனை செய்யும் மதுபானத்தில் கிக்கு இல்லை என அமைச்சர் துரைமுருகன் பேசியது அவர் வகிக்கும் அமைச்சர் பதவிக்கு அழகில்லை, திமுக ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என கூறுவதற்கு பதிலாக கள்ளச்சாராய ஆட்சி, போதை பொருள் ஆட்சி என கூறலாம்.
மதுபானக் கொள்முதலில் அரசு வெளிப்படைத் தன்மைகளுடன் நடந்து கொள்ளவில்லை என தணிக்கைத்துறை குற்றம் சாட்டியுள்ளது, மதுபான ஊழல் வழக்கில் எப்படி கெஜ்ரிவால் சிறையில் உள்ளாரோ அதேபோல முதலமைச்சர் மு க ஸ்டாலின் மதுபான கொள்முதல் ஊழலில் சிறைக்கு செல்வார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கொள்முதல் ஊழல் தொடர்பாக முதல்வர் உட்பட அனைவரும் மீதும் நடவடிக்கை எடுப்போம், பிரதமர் மோடி மணிப்பூருக்க ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என கேட்கலாமே?. நல்ல தலைவர்கள் இல்லை என விஜய் சொன்னதன் அர்த்தம் வேறு, மாணவர்கள் அரசியலுக்கு வராமல் ஒதுங்கி சென்று விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் அப்படி சொல்லியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தயார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பாரா? சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவும் தனித்துப் போட்டியிடும்.
பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாட்டில் சென்று கல்வி கற்க உள்ளதற்கு என்னுடைய வாழ்த்துக்கள், அண்ணாமலை வெளிநாட்டில் நன்றாக கல்வி கற்று தமிழகத்திற்கு வர வேண்டும், தலைவர்களைப் பற்றி எப்படி பண்புடன் பேச வேண்டும் என்பதை வெளிநாட்டில் அண்ணாமலை கற்று வரவேண்டும்" என்று அவர் கூறினார்