பிரான்சில் திருமண விழாவில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பிரான்சில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென முகமூடி அணிந்த மர்மநபர்கள் உள்ளே நுழைந்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
தியோன்வில் அருகே உள்ள ஈடன் அரண்மனை அரங்கம் வெளியே இந்த தாக்குதல் குறிவைத்து நடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 100 பேர் பங்கேற்றிருந்தனர். அப்போது அந்த அரங்கத்திற்கு வெளியே வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய மூன்று பேர் முகமூடி அணிந்திருந்ததுடன் தானியங்கி துப்பாக்கி வைத்திருந்தனர்.
அரங்கத்தின் வேளியே நின்று கொண்டிருந்த மூன்று பேரை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 30 வயதுடையவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஒரு கர்ப்பிணி மற்றும் மற்றொருவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," தாக்குதல் நடத்தியவர் பிஎம்டபிள்யூ காரில் வந்துள்ளனர். வாகனம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். போதைப்பொருள் கடத்தல்காரர்களிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம்" என சந்தேகிக்கிறோம் என்றனர்.