”அப்பா இல்லாதது கஷ்டமா இருக்கு. நான் நடிகராக அறிமுகமான போது அப்பாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என எமோஷனலாகப் பேசியுள்ளார்.
இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’. இதன் முதல் பார்வை அறிமுக விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் அதர்வா முரளி எமோஷனலாகப் பேசியிருக்கிறார். "என்னுடைய குடும்பத்திற்கு சந்தோஷமான, அதே சமயம் எமோஷனலான நாள் இது. ஆகாஷூக்கு முதல் படத்திலேயே பிரிட்டோ சார் போன்ற ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆகாஷ் கனவுக்கு வடிவம் கொடுத்த இயக்குநர் விஷ்ணுவுக்கு நன்றி.
என்னுடைய முதல் படமான 'பாணா காத்தாடி'யில் யுவன் இசைக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தேனா அதேபோலதான், ஆகாஷூக்கும். நான் அறிமுகமாகும் போது அப்பா இருந்தார். மேடையில் ஏறி அவரைப் பார்த்துதான் ’சரியாகப் பேசுகிறேனா?’ என்று கேட்டுக் கொண்டே பேசினேன். அந்த சமயத்தில் அவர் என்ன மனநிலையில் இருந்தார் எனத் தெரியவில்லை.
ஆனால், ஆகாஷ் மேடையில் பேசுவதை நான் கீழிருந்து பார்க்கும் போது தான் எனக்கு அப்பாவின் மனநிலை புரிகிறது. ரொம்பவே எமோஷனலாக இருக்கு. அப்பாவின் கடைசி தருணத்தில் அம்மா, அக்கா, நான் என எல்லோருமே எமோஷனலாக இருந்தோம். அப்போ ஆகாஷ் சின்ன பையன். பாத்துக்கலாம் அண்ணா என எனக்கு ஆறுதல் சொன்னார். இப்போ அவர் ஹீரோவாக அறிமுகம் ஆவது மகிழ்ச்சி. அப்பாவுக்கும் எனக்கும் என்ன அன்பும் ஆதரவும் கொடுத்தீர்களோ அதைவிட ஒருபடி மேலே என் தம்பிக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.