தெலங்கானாவில் பயங்கரம்... கண்ணாடி தொழிற்சாலை வெடி விபத்தில் 5 பேர் பலி; 15 பேர் படுகாயம்

By எஸ்.எஸ்.லெனின்

தெலங்கானா மாநிலம் கண்ணாடி தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டம் பர்குலா கிராமத்தில் சவுத் கிளாஸ் பி.லிட்., என்ற கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. வணிக பயன்பாடுகளுக்கான பல்வேறு ரக கண்ணாடிகள் இங்கே தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இன்றைய தினம் கண்ணாடி தொழிற்சாலை முழுவீச்சில் இயங்கியபோது கம்ப்ரசர் டேங்க் திடீரென வெடித்தது. மாலை 4.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தால், அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் உடல் அவயங்கள் சிதற பலியானார்கள்.

வெடிவிபத்து

தகவலறிந்து போலீஸார் மற்றும் மருத்துவ உதவிக்கான ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்திருப்பதாக போலீஸார் உறுதி செய்தனர். மேலும் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிர்ப்பலி மேலும் உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE