லாரி மீது வேன் மோதி கோர விபத்து; 13 பேர் உயிரிழப்பு!

By கே.காமராஜ்

கர்நாடகாவில் நின்று கொண்டிருந்த லாரி மீது, கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய யாத்ரீகர்கள் வந்த வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஷிவமோகா பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர், பெலகாவி மாவட்டத்தில் உள்ள எல்லம்மா கோயிலுக்கு யாத்திரை சென்று இருந்தனர். வேன் மூலம் இவர்கள் அனைவரும் கோயிலுக்கு சென்று விட்டு பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். ஹவேரி மாவட்டம் அருகே இன்று அதிகாலை சென்றுக் கொண்டிருந்த அந்த வேன், தூக்க கலக்கத்திலிருந்த ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது அதிவேகத்தில் மோதியது.

விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

இந்த விபத்தில் வேனில் பயணித்த இரண்டு சிறுவர்கள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டு, படுகாயமடைந்த மேலும் சிலரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சாலை விபத்து

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE