அருந்ததி ராய் மகுடத்தில் மற்றுமொரு மயிலிறகு... 2024ம் ஆண்டுக்கான பென் பின்டர் விருது வென்றார்

By எஸ்.எஸ்.லெனின்

இந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு இந்த வருடத்தின் ‘பென் பின்டர்’ சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு பெற்ற நாடக ஆசிரியர் ஹரோல்ட் பின்டரின் நினைவாக ‘English PEN Pinter’ விருது 2009-ம் ஆண்டு நிறுவப்பட்டது. நடப்பாண்டுக்கான இந்த விருது இந்தியாவின் பிரபல எழுத்தாளரும், சமூகப் போராளியுமான அருந்ததி ராய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் பிரிட்டிஷ் நூலகம் இணைந்து நடத்தும் விழாவில் அக்டோபர் 10 அன்று, இந்த விருதினை அருந்ததி ராய் பெற இருக்கிறார். மேலும் அந்த விழாவில் அவர் உரையாற்றவும் உள்ளார்.

இங்கிலாந்து, அயர்லாந்து குடியரசு அல்லது காமன்வெல்த் நாடுகளில் வசிக்கும் சிறந்த இலக்கியத் தகுதி கொண்ட எழுத்தாளருக்கு ஆண்டுதோறும் இந்த பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கான நடுவர் குழுவில் ’ஆங்கில பென்’ தலைவர் ரூத் போர்த்விக், நடிகர் காலித் அப்தல்லா மற்றும் எழுத்தாளர் ரோஜர் ராபின்சன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதற்கு முன்பு மைக்கேல் ரோசன், மார்கரெட் அட்வுட், மலோரி பிளாக்மேன், சல்மான் ருஷ்டி, டாம் ஸ்டாபார்ட் மற்றும் கரோல் ஆன் டஃபி ஆகியோர் இந்த விருதை வென்றுள்ளனர்.

அருந்ததி ராய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் ’பென்’ தலைவர் போர்த்விக், அருந்ததி ராயின் எழுத்து அநீதியின் அவசரக் கதைகளை உரிய அழகுடன் பதிவு செய்துள்ளதாக பாராட்டி இருக்கிறார். “2024-ம் ஆண்டுக்கான ’பென் பின்டர்’ விருதினை வென்ற அருந்ததி ராய்க்கு எங்கள் வாழ்த்துகள். அருந்ததி ராய் இந்தியாவில் கவனம் செலுத்தினாலும், அவர் உண்மையிலேயே ஒரு சர்வதேச சிந்தனையாளர். அவரது சக்திவாய்ந்த குரல் அமைதியாக இருக்கக்கூடாது” என்று தனது வாழ்த்து செய்தியில் போர்த்விக் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளர் அருந்ததி ராய்

நடிகர் காலித் அப்தல்லா தனது வாழ்த்து செய்தியில், "அருந்ததி ராயின் புத்தகங்கள், அவரது எழுத்துக்கள் அனைத்தும் வாழ்வின் ஆன்மாவை பதிவு செய்கின்றன. அவரது முதல் புத்தகமான 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' உலகம் சந்தித்த பல நெருக்கடிகளில், இருளின் மத்தியிலான நட்சத்திரமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில், பென் பின்டர் பரிசை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக அருந்ததி ராய் கூறியுள்ளார். "உலகம் எடுத்துக்கொண்டிருக்கும் கிட்டத்தட்ட புரிந்துகொள்ள முடியாத திருப்பத்தைப் பற்றி எழுத ஹரோல்ட் பின்டர் இன்றும் எங்களுடன் இருந்திருக்க வேண்டும். அவர் இல்லாத சூழலில் அவரது இடத்தை நிரப்ப நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE