கள்ளக்குறிச்சியில் நேரில் ஆய்வு - நடிகை குஷ்பு ஆவேச பேட்டி!

By காமதேனு

சிபிசிஐடி போலீஸார் மெத்தனால் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதற்கான ஆதாரத்தை தர முடியுமா என நடிகையும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு ஆவேசமாக பேட்டிக் கொடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஆறு பெண்கள் உட்பட 63 பேர் உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழு விசாரணைக்காக அமைக்கப்பட்டது. இந்த குழு இன்று கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் காலை முதல் ஆய்வு மேற்கொண்டு கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து காவல் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தது.

நடிகை குஷ்பு

இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பு தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள பெண்களுக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது, எதனால் குடித்தீர்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, “கள்ளச்சாராயம் பெண்களுக்கு ஈசியாக கிடைக்கிறது. ஆனால், இதை தடுக்க வேண்டும் என்று உள்ளவர்களுக்கு ஏன் தெரியவில்லை? பெண்கள் குடிப்பதற்காக சொல்லும் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழப்பு

250 லிட்டர் மெத்தனால் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக கூறும் சிபிசிஐடி போலீஸார் அதற்கான ஆதாரம் எங்கு உள்ளது? நீதிபதி முன்பு அதை அழித்தார்களா? ஆதாரத்தை கொடுக்கச் சொல்லுங்கள்” என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

பின்னர், “சாராய வியாபாரம் என்பது கேன்சர் மாதிரி. அடிவேரோடு புடுங்கி எடுத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். ஆனால், அப்படி செய்யாமல் வியாபாரமாக மட்டும் பார்க்கிறார்கள்” என குற்றம் சாட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE