கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக காவல் நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் குஷ்பு இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பெண்கள் உட்பட 61 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேருக்கு கண்பார்வை முழுமையாக பறிபோய் உள்ளது. ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயத்தில் மெத்தனால் வேதிப்பொருள் கலக்கப்பட்டதே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா 10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இன்று தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த காவலர்களிடம் அவர் கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை நடத்தினார். மேலும் திரட்டப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீஸாரிடம் கேட்டறிந்தார். அவருடன் தேசிய மகளிர் ஆணைய குழு பணியாளர்கள் உடன் இருந்தனர்.