ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்த பெண் பயணியின் உடைமை திருடுபோன சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.8 ஆயிரம் இழப்பீடு வழங்க ரயில்வே நிர்வாகத்துக்கு நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம், உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியிலிருந்து, மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியருக்கு மால்வா விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணித்த ஒரு பெண் பயணியின் விலை மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய பை திருடு போனது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பயணி, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், "பாதுகாப்பான, வசதியான பயணம், பயணிகளின் உடமைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வது ரயில்வே துறையின் கடமை” என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை, நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் இந்தர் ஜீத் சிங், உறுப்பினர் ரஷ்மி பன்சால் ஆகியோர் அடங்கிய ஆணையம் விசாரித்தது. புகார்தாரர் தனது உடைமைகள் குறித்து அலட்சியமாக இருந்ததாகவும், லக்கேஜ் முன்பதிவு செய்யப்படவில்லை எனவும் ரயில்வே சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் இதனை நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிராகரித்தது.
இதைத் தொடர்ந்து நுகர்வோர் குறைதீர் ஆணையம், கடந்த 3ம் தேதி பிறப்பித்த உத்தரவில், “புகார்தாரர் தனது உடைமைகள் திருட்டுப் போனது குறித்து வழக்குப் பதிவு செய்வதற்காக முயன்றுள்ளார். ஆனால் அவரை அங்குமிங்கும் அலைக்கழித்துள்ளனர். சட்டப்பூர்வமான உரிமைகளை தொடர, விசாரணை அதிகாரிகளால் சிரமங்களையும், துன்புறுத்தல்களையும் அனுபவித்துள்ளார்.
முன்பதிவு பயணத்தின் போது அவரது உடைமைகள் திருடப்பட்டதால், இந்திய ரயில்வேயின் அலட்சியம் மற்றும் சேவையில் குறைபாடு காரணமாக மனுதாரர் ரயில்வே நிர்வாகத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார்.
ரயில்வே ஊழியர்களின் அலட்சியம் அல்லது சேவையில் குறைபாடு இல்லாதிருந்தால், இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்காது. எனவே, புகார்தாரர் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான இழப்பை திருப்பிச் செலுத்தவும், வழக்கின் செலவுக்காக ரூ.8,000, சிரமம், துன்புறுத்தல் மற்றும் மன வேதனைக்கு இழப்பீடாக ரூ.20,000 வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.