செங்கல்பட்டு அருகே வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த கட்டிடத் தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு அருகே நெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட துஞ்சம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ் (40). இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். யுவராஜ் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்த யுவராஜ், நேற்று இரவு உணவு அருந்திவிட்டு வீட்டு வாசலில் தனது மகனுடன் படுத்து உறங்கியுள்ளார்.
இரவு சுமார் 11 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் மூன்று மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர். பின்னர் தூங்கிக் கொண்டிருந்த யுவராஜை சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். யுவராஜின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்ததால் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த யுவராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உடனடியாக செங்கல்பட்டு தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீஸார், யுவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. நள்ளிரவில் வீட்டுவாசலில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.