கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு... டெல்லியில் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

By கவிதா குமார்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இதில் பாஜக 240 தொகுதிகளைக் கைப்பற்றியது.

பிரதமர் நரேந்திர மோடியுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம், முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், சிரங் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த கூட்டணிகள் கட்சிகள் மொத்தம் 52 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளன. தனித்து ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத பாஜக, இந்த கூட்டணி கட்சிகளின் மூலம் 292 இடங்களில் வென்றுள்ளது. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

அமைச்சரவை கூட்டம்

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE