திகார் சிறையில் இருந்தபடி சுயேட்சையாக போட்டியிட்ட ஷேக் அப்துல் ரஷீத் என்பவரிடம் காஷ்மீர் முன்னாள் முதல்வரான ஒமர் அப்துல்லா அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் எதிர்த்துப் போட்டியிட்ட, ஷேக் அப்துல் ரஷீத் என்பவரிடம் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா, சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
ரஷீத் இஞ்சினியர் என்று அழைக்கப்படும் ஷேக் அப்துல் ரஷீத், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுபு சட்டமான ’ஊபா’ கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாரமுல்லா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ரஷீத்துக்காக, அவரது இரு மகன்களும் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தனர். வாக்குப்பதிவுக்கு இரு வாரங்களுக்கு முன்பாக தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்ததோடு, முன்னாள் முதல்வரை வீழ்த்தி பெரு வெற்றி பெற்றிருக்கிறார் ரஷீத்.
ஒமர் அப்துல்லா மட்டுமன்றி பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டின் தலைவர் சஜாத் லோன் என்பவரையும் இந்த வகையில் ரஷீத் வீழ்த்தி உள்ளார். சஜாத் சுமார் 96 ஆயிரம் வாக்குகள் பெற, ஒமர் அப்துல்லா சுமார் 1.4 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தார். சுமார் 2.57 லட்சம் வாக்குகளுடன் ரஷீத் வெற்றி பெற்றுள்ளார். சரியான வாக்குகள் எண்ணிக்கை மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகாத போதும், ஒமர் அப்துல்லா தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
அப்துல் ரஷீத்துக்கு வாழ்த்து தெரிவித்த ஒமர் அப்துல்லா தனது எக்ஸ் பதிவில், “தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். வடக்கு காஷ்மீரில் வெற்றி பெற்ற இஞ்சினியர் ரஷீத்துக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி அவரை சிறையில் இருந்து விடுவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
வடக்கு காஷ்மீரின் லாங்கோட் தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக வென்றிருக்கும் ரஷீத், பயங்கரவாதிகளுக்கு நிதி சேர்த்த குற்றச்சாட்டின் கீழ் 2019-ல் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டார். ஆனபோதும் டெல்லியின் திகார் சிறையில் இருந்தபடியே, இரு மகன்களின் உதவியால் தற்போது பாரமுல்லா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்