மக்களவைத் தேர்தல் கருத்து கணிப்புகளை விட தமிழகத்தில் பாஜக அதிக அளவில் வெற்றி பெறும் என்று தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
முன்னாள் ஆளுநரும், தென்சென்னை பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராசனின் பிறந்த நாளான இன்று அவர், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் தனது தந்தை குமரி ஆனந்தனை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற ரயில் மூலமாக வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு வந்தார். அங்கு அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். தனது பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு தமிழிசை இனிப்புகளை வழங்கினார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " நாட்டில் நல்ல திட்டங்களைக் கொடுத்தற்காக மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் கருத்து கணிப்புகளை விட பாஜக கூட்டணி அதிக அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. வேங்கைவயல் பிரச்சினைக்கு இத்தனை நாட்களாகியும் தீர்வுகிடைக்கவில்லை.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கொலை செய்யப்பட் சம்பவத்தில் இதுவரை எந்த தீர்வும் ஏற்படவில்லை. தமிழகத்தல் மின்சாரம், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றத்தால் மக்கள் பாதிக்கப்படைந்துள்ளர்.
நாட்டில் உள்ள மக்கள் வளர்ச்சியை நோக்கி ஊழலை எதிர்த்து வாக்களித்திருப்பது போல தமிழக மக்கள் இதுபோன்ற புரட்சியை செய்ய வேண்டும். தமிழகத்தில் பாஜகவை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானத்தில் ஈடுபட்டது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடியது" என்றார்.