மீன்பிடிப்பு தடை நீக்கம்: 10 நாட்களுக்கு பிறகு கடலுக்குச் சென்ற நாகை மீனவர்கள்

By கரு.முத்து

நாகப்பட்டினம்: பலத்த காற்று, கடல் சீற்றம் மற்றும் ரீமல் புயல் எச்சரிக்கை காரணமாக பைபர் படகு மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நாகை மாவட்ட மீன்வளத்துறை விலக்கிக் கொண்டது. இதையடுத்து 10 நாட்களுக்கு பிறகு பைபர் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

ரீமல் புயல் காரணமாக கடலில் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததால் கடந்த 17-ம் தேதி முதல் பைபர் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல நாகை மாவட்ட மீன்வளத்துறை தடை விதித்திருந்தது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ரீமல் புயலாக மாறியதால் நாகை உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இப்புயல் நேற்று முன் தினம் இரவு வங்க தேசம் அருகே கரையை கடந்ததைத் தொடர்ந்து அனைத்து துறைமுகங்களிலும் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதனையடுத்து மீன்வளத் துறையினர் பைபர் படகு மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடையையும் விலக்கிக் கொண்டனர். இதையடுத்து, நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கல்லார், கீச்சாங்குப்பம் கோடியக்கரை, வேதாரண்யம், ஆறுகாடுத் துறை உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் 10 நாட்களுக்குப் பிறகு இன்று கடலுக்குச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE