பொது விவாதத்துக்கான ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அழைப்பை காங்கிரஸ் ஏற்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடியும் இதனை ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும், பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல்கள் களத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தலின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பொது தளத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும், இதில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் பங்கேற்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், அஜித் பி.ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோர் கடந்த சில நாள்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த அழைப்பை ஏற்று தேர்தல் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என ராகுல் காந்தி தற்போது தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நாடாளுமன்ற தேர்தல் குறித்த பொது விவாதத்துக்கான ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அழைப்பை காங்கிரஸ் ஏற்கிறது.
பொது தளத்தில் அரசியல் கட்சிகள் தங்களின் பார்வைகளை முன்வைப்பதற்கான நேர்மறையான ஒரு முன்னெடுப்பாக இந்த விவாதம் அமையும். பிரதமர் மோடியும் இந்த விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென நாடு எதிர்பார்க்கிறது" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பொது விவாதம் குறித்த பரபரப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், அதற்கு காங்கிரஸ் கட்சி தயார் என அறிவித்துள்ளது. இதேபோல பாஜக சார்பில் பிரதமர் மோடியும் பங்கேற்கத் தயார் என அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.