நடிகர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

By காமதேனு

நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் நேற்றிரவு மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் நடிகர் விஜயகாந்த், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இருமல், சளி தொந்தரவுகள், தொண்டை வலி ஏற்பட்டதால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விஜயகாந்திற்கு, அதன் பின்னர் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் இருந்ததால்அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

பின்னர், விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அவரை நுரையீரல் நிபுணர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதாகவும், அவருக்கு முழுவதுமாக ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் தகவல் வெளியானது. அதன் பின்னர், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன் பின்னர் தேமுதிக செயற்குழு, பொதுகுழு கூட்டங்களிலும் கலந்து கொண்டார். இந்நிலையில், நேற்றிரவு மீண்டும் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, விஜயகாந்த் உடல்நிலைக் குறித்து தேமுதிக அறிக்கை வெளியிட்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE