என்னைப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கிறார்கள்... பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

By காமதேனு

வெற்றி பெற்று விடுவேன் என்பதற்காக, என்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கும் நோக்கில் செயல்படுகிறார்கள் என்று திமுக மீது பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

வாகனத்தில் சோதனை

சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ம் தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தைக் கொண்டுசென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தைக் கொண்டுசென்றதாக .அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்த்தனனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிப்பதற்காக அவருக்கு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நயினார் நாகேந்திரன் வாகனத்தில் சோதனை

இந்நிலையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் விசாரிக்க முடிவுசெய்து தாம்பரம் போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், நேற்று இரவு வரை தனக்கு ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக எந்த சம்மனும் தனக்கு வரவில்லை என்று நெல்லை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி விவகாரம் தொடர்பாக இதுவரை எனக்கு எவ்வித சம்மனும் வரவில்லை. நெல்லை தொகுதியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. நான் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக மூன்று அமைச்சர்கள் தொகுதிக்குள் முகாமிட்டு பணியாற்றி வருகிறார்கள்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதனைக் காவல் துறையினர் தடுக்கவில்லை. ஆனால் எனது வாகனத்தில் பிரசாரத்திற்கு செல்லும்போது மட்டும் தினமும் மூன்று முறை வாகனத்தை மறித்து சோதனை செய்கிறார்கள். பிரச்சாரம் செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் இதுபோன்று செயல்படுகிறார்கள்.

ஆனாலும், அதையும் மீறி தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு எந்தவித என்ற அழுத்தமும் இல்லை. பிரதமர் நரேந்திரமோடி அம்பை கூட்டத்தில் நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்" என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE