இன்றும் 49 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்திலிருந்து இதுவரை 141 பேர் வெளியேற்றம்

By காமதேனு

நாடாளுமன்ற மக்களவையில் இன்றும் 49 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் போராட்டம்.

நாடாளுமன்றத்தில் கடந்த 13ம் தேதி நிகழ்ந்த பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இரு அவைகளும் பல முறை ஒத்தி வைக்கப்படுவதும், பின்னர் மீண்டும் கூடுவதுமாக உள்ளது. இந்நிலையில் அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கடந்த வாரம் 14 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நேற்று மக்களவையில் 33 பேரும், மாநிலங்களவையில் 45 பேரும் என 78 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தி்ல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் அவைக்குள் மீதம் இருந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், "நாடாளுமன்ற கூட்டத்துக்கு பிரதமர் வர வேண்டும்... உள் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்..." என கோஷமிட்டனர். இதனால் இன்றும் இரண்டு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக மக்களவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திய மேலும் சில எம்.பி.க்களை இடை நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

அதன்பேரில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, காங்கிரஸ் எம்.பி.க்கள் சசிதரூர், மணீஷ் திவாரி, கார்த்தி சிதம்பரம் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே உள்ளிட்ட 49 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன் மூலம், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் மொத்தம் 141 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவையில் இருந்து 95 பேரும், மாநிலங்களவையில் இருந்து 46 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு கூட்டத்தொடரில் அதிகபட்ச எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிகழ்வாக இது அமைந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

5 மாவட்டங்களில் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு!

ராமர் கோயில் திறப்பு விழா: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்கவில்லை; என்ன காரணம்?

ஸ்ரீவைகுண்டம்: 3வது நாளாக ரயிலுக்குள் 500 பயணிகள் தவிப்பு; மீட்க வந்தது ஹெலிகாப்டர்கள்!

111 பேர் பலியான பரிதாபம்... சீனாவை உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரயில் நிலையங்களில் ரீல்ஸ் இம்சை... இன்ஸ்டாகிராம் பிரபலத்தை வைத்தே இளசுகளை எச்சரித்த போலீஸார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE