அக்.23-ல் ஓய்வூதிய அறக்கட்டளை முற்றுகை போராட்டம் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் அறிவிப்பு

By எஸ்.ஆனந்த விநாயகம்

சென்னை: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முன்வைத்து அக்.23-ம் தேதி ஓய்வூதிய அறக்கட்டளையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: ''போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு தமிழக அரசு அகவிலைப்படி உயர்வை வழங்கவில்லை. ஓய்வு கால பணப்பலன்களை 23 மாதங்களாக வழங்கவில்லை. எனவே, அகவிலைப்படி உயர்வு, பணப்பலன்கள், மருத்துவ காப்பீடு, ஒப்பந்த உயர்வுகள் அடிப்படையில் ஓய்வூதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மிகப்பெரிய அளவில் 2 போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 5 வழக்குகளின் தீர்ப்புகளையும் அமலாக்காமல் மேல்முறையீடு செய்து காலம் தாழ்த்தி வருகிறது.

இது போன்ற நடவடிக்கையை தவிர்த்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை, பல்லவன் சாலையில் உள்ள ஓய்வூதிய அறக்கட்டளையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம். வரும் அக்.23-ம் தேதி நடைபெறும் இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் பங்கேற்கவுள்ளனர்.'' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE