சென்னை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய உத்தரவு

By KU BUREAU

சென்னை: சென்னை, கரூர், நாமக்கல், தூத்துக்குடி மாநகராட்சிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பல நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு அவற்றின் எல்லைகளும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னை, தூத்துக்குடி, கரூர், நாமக்கல் ஆகிய மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் சுகாதாரப் பணியாளர்களாக பணியாற்றிய 81 பேர் தங்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.பாலா டெய்சி, ‘தூத்துக்குடி, நாமக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்ட பஞ்சாயத்துகளில் தற்காலிக சுகாதார பணியாளர்களாக பணியாற்றியவர்கள், 3 ஆண்டுகள் பணி செய்திருந்தால் அவர்களை பணி நிரந்தரம் செய்யலாம் என உயர் நீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் கடந்த 2017ம் ஆண்டு உறுதி செய்துள்ளது. அதன்படி நகராட்சி நிர்வாகத் துறை கடந்த 2019ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைப்படி 275 பேரின் பணி, நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. எனவே மனுதாரர்களையும் பணிநிரந்தரம் செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அப்போது மாநகராட்சிகள் தரப்பில், “தற்காலிக சுகாதாரப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது” என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தனது உத்தரவில், “சுகாதாரப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை ஏதும் பிறப்பிக்கவில்லை. தற்காலிக சுகாதார பணியாளர்கள் பலருக்கு குடிநீர் வடிகால் வாரியத்திலும் பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே 3 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக சுகாதார பணியாளர்களாக பணியாற்றியுள்ள மனுதாரர்கள் அனைவருக்கும், தமிழக அரசு 12 வார காலத்துக்குள் அவர்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE