துணை முதல்வராக உதயநிதி, செந்தில் பாலாஜி ரிட்டர்ன் - அமைச்சரவை மாற்றம் ஹைலைட்ஸ்

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் போகிறார் என்று பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா இன்று (செப்.29) பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறுகிறது.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டதுடன், அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கே.ராமச்சந்திரனுக்கு அரசு கொறடா பொறுப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

செந்தில் பாலாஜி, டாக்டர் கோவி.செழியன், சா.மு.நாசர், பனைமரத்துப்பட்டி ஆகியோர் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அமலாக்கத் துறை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான இலாகா பின்னர் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

தமிழக அமைச்சரவை தற்போது 5-வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:

> இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதலாக திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையை ஒதுக்குவதோடு, துணை முதல்வராகவும் பொறுப்பு வழங்கப்படுகிறது.

> வி.செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.

> பால்வளத் துறை அமைச்சரான டி.மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

> உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றப்படுகிறார்.

> சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்படுகிறார்.

> ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், மனிதவள மேம்பாடு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

> வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தனுக்கு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

> பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பால்வளம், காதி, கிராமத் தொழில்கள் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

> நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வசமிருந்த மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு பதிலாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE