காரைக்கால் ஆயுஷ் மருத்துவமனையில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை காரைகள்!

By KU BUREAU

காரைக்கால்: காரைக்காலில் இயங்கி வரும் ஆயுஷ் மருத்துவமனை வளாகத்தில் மேற்கூரையின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால், நோயாளிகள், மருத்துவர்கள் அச்சத்துடன் வெளியேறினர்.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் ஓர் அங்கமாக, மருத்துவமனை வளாகத்தில் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி(ஆயுஷ்) மருத்துவமனை 2011-ம் ஆண்டுக்கு முன்பு வரை இயங்கி வந்தது. பின்னர், 2018-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை காரைக்கால் பாரதியார் வீதியில், பயன்பாடற்று இருந்த நகராட்சி விடுதிக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய சிகிச்சைப் பிரிவுகள், மருந்தகங்கள் தனித்தனி அறைகளில் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஏராளமானோர் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இக்கட்டிடம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால், வேறு இடத்துக்கு மருத்துவமனையை மாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து காணப்படும்
காரைக்கால் ஆயுஷ் மருத்துவமனை கட்டிடம்.

இந்நிலையில், இக்கட்டிடத்தின் ஒரு பகுதியில் மேற்கூரையில் இருந்து சிமென்ட் காரைகள் நேற்று முன்தினம் திடீரென அதிகளவில் பெயர்ந்து விழுந்தன. அதிக சப்தத்துடன் சிமென்ட் காரைகள் விழுந்ததால் நோயாளிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கட்டிடத்தில் இருந்து விரைந்து வெளியேறினர். இந்தக் கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

எனவே, இம்மருத்துவமனைக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE