பள்ளியில் சர்ச்சை பேச்சு விவகாரம் | மகாவிஷ்ணு ஜாமீன் மனு மீது போலீஸ் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்

By KU BUREAU

சென்னை: மாற்றுத் திறனாளிகளை அவமதித்ததாக கைதான மகாவிஷ்ணு ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பரம்பொருள் அறக்கட்டளையின் நிர்வாகியான மகாவிஷ்ணு மீது,மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக சைதாப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கடந்த செப்.7-ம்தேதியன்று கைது செய்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கோரிமகாவிஷ்ணு சென்னை முதன்மைஅமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையில் தான் பேசவில்லை என்றும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்திருந்தார்.

மேலும், தனது பேச்சு எடிட்செய்யப்பட்டு யூடியூபில் வெளியி டப்பட்டுள்ளது. தனது முழு பேச்சையும் கேட்காமல் தனக்கு எதிராக போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கைதானேன்.

போலீஸார் காவலில் எடுத்துவிசாரித்தபோதும் முழு ஒத்துழைப்பு வழங்கினேன். தனது அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், வங்கிக்கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். எனவேஎனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து இந்த மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிஅக்.3-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE