வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: சென்னை, புறநகரில் கொட்டி தீர்த்த கனமழை - அதிகபட்சமாக அம்பத்தூரில் 14 செ.மீ பதிவு

By KU BUREAU

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. அவ்வப்போது லேசான மழையும் பெய்துவந்தது. நேற்று முன்தினம் காலைமுதல் வெயில் இருந்தது. இரவு 8.30 மணிக்கு மேல் லேசான சாரல் மழையாகத் தொடங்கி, பலத்த காற்றுடன் சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் கனமழையாக கொட்டித் தீர்த்தது.

இதன் காரணமாக கோயம்பேடு சந்தை பகுதிகள், அண்ணாநகர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. அம்பத்தூர் உள்ளிட்டபகுதிகளில் சாலையில் மரங்கள்சாய்ந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி பணியாளர்கள் வந்து,மரத்தை வெட்டி அகற்றினர்.

மேலும் மாநகரில் உள்ள பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது. மாநகராட்சி நடவடிக்கையால் நேற்று காலை அனைத்துசுரங்கப் பாதைகளிலும் மழைநீர்வெளியேற்றப்பட்டு, வழக்கமான போக்குவரத்து இருந்தது.

கொளத்தூர், ஆர்.கே.நகர், மாதவரம் தணிகாச்சலம் காலனி, சூளை,வியாசர்பாடி பக்தவத்சலம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. சில இடங்களில் கழிவுநீர் கலந்த மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

நேற்று காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக அம்பத்தூரில் 14, அண்ணாநகர் மேற்கில் 12 செ.மீ, மணலி புதுநகரில் 10 செ.மீ, கத்திவாக்கம், பெரம்பூரில் தலா 9 செ.மீ, வடபழனி, புழல், கொளத்தூரில் தலா 8 செ.மீ, மாதவரத்தில் 7 செ.மீ மழை பதிவானது. புறநகர் பகுதிகளான திருவாலங்காடில் 11 செ.மீ, திருத்தணி, கேளம்பாக்கத்தில் 6 செ.மீ, சோழவரத்தில் 5 செ.மீ, செம்பரம்பாக்கம், தாம்பரம், குன்றத்தூரில் தலா 4 செ.மீ மழை பதிவானது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் கூறியதாவது: ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலப்பகுதிக்கு வந்தது. அதனால் தெற்கு ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளுக்கு நேற்று முன்தினம் கனமழை எச்சரிக்கை கொடுத்திருந்தோம். இந்நிலையில், இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மேற்கு மற்றும் தென்மேற்கு திசை காற்றை ஈர்த்தது. இதன் காரணமாக ஆந்திரப் பகுதிகளில் பெய்ய வேண்டிய கனமழைசென்னைக்கு நகர்ந்து வந்து பெய்துள்ளது என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE