100 அடிக்கும் கீழே சென்ற மேட்டூர் அணை நீர்மட்டம்: காவிரி டெல்டா கல்லணை தலைப்பிலிருந்து முறைப்பாசனம்!

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: காவிரி டெல்டா பாசனத்திற்காகக் கல்லணை தலைப்பில் இருந்து செப்.27-ம் தேதி முதல் முறைப்பாசனம் அமல்படுத்தப்படுகிறது எனத் தஞ்சாவூர், கீழ்காவிரி வடிநில வட்ட, கண்காணிப்புப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தஞ்சாவூர், கீழ்காவிரி வடிநில வட்ட, கண்காணிப்புப் பொறியாளர் மு.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழக முதல்வரால் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக கடந்த ஜூலை 28-ம் தேதி மாலை 3 மணியளவில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து, கல்லணையிலிருந்து ஜூலை 31-ம் தேதி காலை 9.15 மணியளவில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது, தற்போது அனைத்து உப ஆறுகளிலும் கடைமடைவரை நீர் சென்றடைந்து விட்டது.

ஜூலை -28-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.76 அடியாகவும் நீர் 79.493 டி.எம்.சியாகவும் உள்ள நிலையில், இருப்பில் இருக்கும் இருப்பு தண்ணீரை பாசனத்திற்குத் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வந்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பினை கருத்தில் கொண்டு நீர் பங்கீட்டில் தேவைக்கேற்ப மாறுபாடுகள் செய்து சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், பயிர்கள் சாகுபடி சிறந்த முறையில் திட்டமிட்டு மேற்கொள்ளவும், நீர் பங்கீட்டினை முறைப்படுத்தவும் கீழ்க்கண்ட அறிக்கை வெளியிடப்படுகிறது. மேலும், செப்.25 காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.79 அடியாகவும், நீர் இருப்பு 64.569 டி.எம்.சியாகவும் உள்ள நிலையில் மேட்டூர் அணையில் தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர் இருப்பினை கருத்தில் கொண்டு தற்போது எடுக்கப்பட்டு வரும் 15 ஆயிரம் கன அடியிலிருந்து குறைவாகவோ அல்லது அதிகமாகவோ எடுத்து செப்.27-ம் தேதி, மாலை 6 மணி முதல் முறைப்பாசனத்தை அமல்படுத்தவும், முதல் 6 நாட்கள் வெண்ணாற்றிலும் அடுத்த 6 நாட்கள் காவிரியிலும் சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கல்லணைக்கால்வாயில் மேற்பகுதி முறை, கீழ்ப்பகுதி முறை என்று முறைவைத்து தண்ணீர் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழாண்டு பயிர் சாகுபடியில் எந்தவித இடையூறும் இல்லாது பாசனவசதி அளிக்கப்படவேண்டும் என்றும் பருவமழை கிடைக்கப்பெறின் அதற்கேற்ப நீர்ப்பங்கீடு மாற்றி அமைத்துக் கொள்ளலாம் எனவும், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் அறிவுரை வழங்கியுள்ளார்கள். எனவே, விவசாயிகள் நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் வளத்துறையின் நீர் பங்கீட்டிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE