நுங்கம்பாக்கம் தெருவுக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: திரை இசைப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவரும், ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்பிற்குரியவருமான திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள், கடந்த 25-9-2020 அன்று இதே நாளன்று நம்மை விட்டுப் பிரிந்தார். காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர்.

அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு, "எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயரிடப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்" எனக் குறிப்பிடபட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE