சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளராக நீதிபதி அல்லி நியமனம்

By KU BUREAU

சென்னை: சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல மேலும் சில மாவட்ட நீதிபதிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக பணியாற்றிவந்த மாவட்ட நீதிபதி எம்.ஜோதிராமன், உயர் நீதிமன்ற நீதிபதியாகநியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, சென்னை பெருநகர முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றிவரும் எஸ்.அல்லியை உயர் நீதிமன்ற புதிய தலைமை பதிவாளராக நியமித்து பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் உத்தரவிட்டுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் தொடர்புடைய அமலாக்கத் துறை வழக்குகளை விசாரித்து வந்தவர் நீதிபதி எஸ்.அல்லி என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, சென்னை உயர் நீதிமன்ற நீதித் துறை பதிவாளராக பணியாற்றிய மாவட்ட நீதிபதி ஜெ.செல்வநாதன், ஆய்வு பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி ஏ.அப்துல் காதர், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதித் துறை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை கிளையில் பணியாற்றி வரும் ஊழல் தடுப்பு கூடுதல் பதிவாளரான மாவட்ட நீதிபதி ஜி.ராமஜெயம், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு பதிவாளராக பணியாற்றிய மாவட்ட நீதிபதி கே.சீதாராமன், நீதித் துறை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றிய கே.அய்யப்பன் மதுரை கிளை ஊழல் தடுப்பு கூடுதல் பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை கிளையில் நீதித் துறை பதிவாளராக பணியாற்றிய மாவட்ட நீதிபதி என்.வேங்கடவரதன், சென்னையில்எம்.பி., எம்எல்ஏக்கள் மீதானவழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்த எஸ்.கார்த்திகேயன், சென்னை பெருநகர முதன்மை அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE