பழநி பஞ்சாமிர்தம் குறித்த கருத்தால் கைது: சட்டவிரோதம் என கூறி மோகன் ஜி ஜாமீனில் விடுவிப்பு

By KU BUREAU

திருச்சி / சென்னை: பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து திருச்சி நீதிமன்றம் நேற்று மாலை உத்தரவிட்டது. திருப்பதி கோயில் லட்டு பிரசாத சர்ச்சையைத் தொடர்ந்து, பழநி பஞ்சாமிர்தம் குறித்து திரைப்பட இயக்குநரும், பாமக பிரமுகருமான மோகன் ஜி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சமயபுரம் கோயில் மேலாளர் கவியரசு அளித்த புகாரின் பேரில், மோகன் ஜி மீது 5 பிரிவுகளின் கீழ் சமயபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து, திருச்சி எஸ்.பி. வருண்குமார் உத்தரவின் பேரில், சென்னை ராயபுரத்தில் இருந்த இயக்குநர் மோகன் ஜியை சமயபுரம் போலீஸார் நேற்று கைது செய்து, திருச்சிக்கு அழைத்து வந்து 3-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி பாலாஜி (பொறுப்பு), “இந்த வழக்கில் கைது செய்வதற்கான முகாந்திரம் இருந்தாலும், போலீஸார் முறையான கைது நடவடிக்கைகளைப் பின்பற்றவில்லை. கைது நடவடிக்கை சட்டவிரோதமானது” என்று கூறி, அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.

பாமக, பாஜக கண்டனம்: மோகன் ஜி கைதுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராமதாஸ்: அரைகுறை புரிதலுடன் திருச்சி மாவட்ட போலீஸார் மோகன் ஜி-யை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை. பொதுநலன் கருதி கூறியதை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக வார்த்தைகளைப் புரிந்துகொண்டு அவரைக் கைது செய்திருப்பது அநீதி.

அன்புமணி: பழநி தண்டாயுதபாணி கோயில் பஞ்சாமிர்தம் சில வாரங்களுக்கு முன் பெருமளவில் அழிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்ட சந்தேகங்களைத்தான் மோகன் ஜி சுட்டிக்காட்டியிருந்தார். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பவர்களை கைது செய்யாத தமிழக அரசு, கிளி ஜோசியர்களையும், சமூக ஊடகங்களில் பேசுபவர்களையும் கைது செய்து வீரத்தைக் காட்டக் கூடாது.

அஸ்வத்தாமன்: திரைப்பட இயக்குநர் மோகன்ஜி கைது கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சியில் எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா, கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத காவல் துறை, இதுபோன்ற ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாகச் செய்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE