பள்ளிக் கல்வித் துறையை கண்டித்து மதுரையில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: பணியிடை நீக்கம், இடமாறுதல் செய்வதை கண்டித்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிக் கல்வித்துறையிலுள்ள அதிகாரிகள் கடந்த ஓராண்டாக சிறு, சிறு பிரச்சினைகளை காரணம் காட்டி தொடர்ச்சியாக மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களை பணியிடை நீக்கம், இடமாறுதல் செய்வதை கண்டித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஐ.சாம் பிரசாத் ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சரவணமுருகன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் நாக சுப்பிரமணியன், மண்டலச் செயலாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தனர். இதில் மாநிலப் பொருளாளர் கே.அனந்த ராமன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் மாநில கள்ளர் பள்ளி செயலாளர் சின்னப்பாண்டி, கந்தசாமி மாநில பொதுக்குழு உறுப்பினர் கந்தசாமி, ஓய்வு தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், குமரேசன் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் மாவட்டப் பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார். இதில் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் கருப்புப்பட்டை அணிந்து வேலை செய்ததுடன் ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE