கொடைக்கானல் அருகே கிளாவரை வனப்பகுதியில் தரை பிளவுக்கு நில அதிர்வு காரணமில்லை: புவியியல் துறை

By KU BUREAU

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே கிளாவரையில் உள்ள கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட திடீர் பிளவுக்கு நில அதிர்வு காரணமில்லை என புவியியல் துறையினர் நடத்திய முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களின் கடைசி கிராமமாககிளாவரை உள்ளது. இக்கிராமத் தின் ஒரு பகுதியான கீழ் கிளாவரைப் பகுதிக்கு செருப்பனூத்து ஓடையில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம்.

கடந்த சில நாட்களாக தண்ணீர்வராததால் குழப்பம் அடைந்த மக்கள் செருப்பனூத்து ஓடைப் பகுதிக்குச் செல்லும் வழியில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டுள்ளதா? என பார்க்கச் சென்றனர்.

300 அடி தூரத்துக்கு பிளவு: அப்போது கீழ் கிளாவரை பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாகச் செல்லும்போது கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் 300 அடி தூரத்துக்கும் மேல் நிலத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நில பிளவுக்குக் காரணம் நில அதிர்வா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, கிளாவரை பகுதிஆனைமலை புலிகள் காப்பகத்துக்குக் கட்டுப்பட்ட வந்தரேவு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் நேற்று முன்தினம் (செப்.22) வனக்காவலர் தங்கபார்த்திபன், வனவர் ராஜ்குமார் ஆகியோர் நில பிளவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறும்போது, ‘‘பிளவு ஏற்பட்ட பகுதி செருப்பனூத்து ஓடை வாய்க்காலில் இருந்து கிளாவரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய் அமைந்துள்ள பகுதியாகும். மலைப்பகுதியில் மழை மற்றும் வெயில் காலங்களில்இம்மாதிரியான நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படுவது இயல்புதான். நில அதிர்வு ஏதும் ஏற்படவில்லை’’ என்று தெரிவித்தனர்.

நில அதிர்வு பதிவாகவில்லை: கொடைக்கானல் வானிலைஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராஜலிங்கம் கூறும்போது, ‘‘கொடைக் கானல் மலைப்பகுதியில் தற்போதுவரை நில அதிர்வு ஏதும் பதிவாக வில்லை’’ என்றார். இருப்பினும் பொதுமக்களின் அச்சத்தை நீக்கும் வகையில் கூனிப்பட்டி வனப்பகுதியில் திடீர் நில பிளவுகள் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து திண்டுக்கல் எம்.பி சச்சிதானந்தம், பழநி எம்எல்ஏ செந்தில்குமார், வட்டாட்சியர் கார்த்திகேயன், புவியியல் மற்றும் வனத்துறையினர் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அச்சப்பட வேண்டாம்: அப்போது, மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்ய மண் மாதிரிகளை புவியியல் துறையினர் சேகரித்தனர். ஆய்வுக்குப் பின் அவர்கள் தெரிவித்ததாவது:

கொடைக்கானல் மலைப் பகுதியில் நில அதிர்வு ஏதும் ஏற்படவில்லை. அதிக வெயில் மற்றும் மழை காரணமாக நிலத்தில் பிளவு ஏற்படுவது இயற்கையாகவே நடைபெறுவதுதான். அதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவை யில்லை. மண் மாதிரி ஆய்வுக்கு பின் முழுமையான காரணங்கள் தெரிய வரும் என்று தெரிவித்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE