குற்றச்சாட்டுக்குள்ளான திண்டுக்கல் நிறுவனத்திடம் இருந்து எந்த கோயிலுக்கும் நெய் வாங்க கூடாது: ஹெச்.ராஜா

By KU BUREAU

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதி கோயில் லட்டு பிரசாதம் செய்ய பயன்படுத்துகிற நெய்யில் மிருகக் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளது. இந்த நெய்யை திண்டுக்கல்லை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளது. அதே நிறுவனம் தான் பழனிக்கும் நெய் சப்ளை செய்கிறது. எனவே, இந்த குற்றச்சாட்டில் இருந்து அந்நிறுவனம் விடுதலையாகும் வரை தமிழகத்தில் எந்த கோயிலுக்கும் அந்நிறுவனத்தில் இருந்து நெய் வாங்கக் கூடாது. மேலும், அந்நிறுவனத்தின் உரிமையாளர் பழனி கோயிலின் தக்காராக உள்ளார். எனவே, அவரை அப்பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை இந்து கோயில்களின் பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறது. பழனியில் நல்ல நிலையில் இருக்கும் சுற்றுச்சுவரை இடித்து பல கோடி ருபாய்க்கு மீண்டும் சுவர் கட்டுகிறார்கள். ஆனால்,அது பலவீனமான கட்டுமானமாக இருக்கிறது. சென்னையில் மயிலாப்பூர் கோயில் பணத்தில்ஹோட்டல் கட்டினார்கள். ஆனால்,அந்த ஹோட்டல் கட்டுமானம் பலவீனமானது என இடித்துவிட்டனர்.

தனியார் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், அதன் மீது தமிழக அரசு அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் தான் நிர்வகிக்க முடியும் என 2014-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அன்று முதல் சிதம்பரம் கோயில் குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இந்த கோயிலுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு ரூ.90 ஆயிரத்துக்கு மட்டுமே வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். ஒரு ஏக்கர் ரூ.90-க்கு ஒத்திக்கு கிடைக்குமா என அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்க வேண்டும். பிரதமரை வெட்டுவேன் என சர்ச்சைக்குறிய வகையில் பேசிய தா.மோ.அன்பரசனை கைது செய்யாமல், சட்டவிரோத ஆட்சியை நடத்திக் கொண்டிரும் திமுக அரசு, ஒரு பாஜகவினர் மீது கூட வழக்குப்பதிவு செய்யக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE