சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்தில் 118 ஏக்கரில் பசுமை பூங்கா: தமிழக அரசு உத்தரவு

By KU BUREAU

சென்னை: சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை துறை சார்பில் மக்கள் பயன்பாட்டுக்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும்மக்களுக்கு தேவையான வசதிகளை உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை வெங்கடாபுரம், அடையாறு, வேளச்சேரி ஆகிய இடங்களில் உள்ள 160.86 ஏக்கர் நிலம் கடந்த 1945 ஏப்ரல் 1-ம் தேதி முதல்99 ஆண்டுகளுக்கு கிண்டி ரேஸ்கிளப் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த நிலம் மக்கள் பயன்பாட்டுக்கு தேவைப்படுவதால், தமிழக அரசு குத்தகையை ரத்து செய்து, நிலத்தை திரும்ப பெற்று, மிக சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் மக்களின் இதர பயன்பாட்டுக்கு உருவாக்கம் செய்யப்பட உள்ளது.

எனவே, கிண்டியில் நில குத்தகைரத்து செய்யப்பட்டு அரசு சுவாதீனம் செய்யப்பட்ட நிலத்தில், மக்கள் பயன்பாட்டுக்காக மிக சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் மக்களுக்கு தேவையான வசதிகள் அமைக்க, அரசு புறம்போக்கு எனும் வகைப்பாட்டில் இருக்கும் ரூ.4,832 கோடி மதிப்பிலான 118 ஏக்கர் நிலத்தை தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறைக்கு நிலமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சென்னை மாநகரம் 86.90 லட்சம் மக்கள்தொகை கொண்டதாகவும், சென்னையில் ஒரு தனி நபருக்கான பசுமை நில பகுதி 1.03 சதுர மீட்டராகவும் உள்ளது. மேலும், சென்னைபெருநகரின் பசுமை வெளியானது, வனப்பகுதி, பூங்கா, விளையாட்டு திடல், திறந்தவெளி திடல் எனஅனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக சென்னையின் பரப்பில் வெறும்6.7 சதவீதமாகத்தான் உள்ளது. இது பிற இந்திய மாநகரங்களைவிட மிகவும் குறைவு.

எனவே, சென்னையின் பசுமைப் பகுதியை அதிகரிக்க வேண்டிய தேவையின் அடிப்படையிலும், மக்கள்தொகை பெருகி வருவதை கருத்தில் கொண்டும், பூங்காக்கள், பசுமைவெளிகளை உருவாக்குவது அவசியமாகி உள்ளது. இதுவரை பூங்காக்கள் அமைக்கப்படாத இடங்களில் புதிய பூங்காக்களை உருவாக்க வேண்டி உள்ளது. மக்களின் உடல், மன நலஆரோக்கியத்துக்கு பூங்காக்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கின்றன. மன அழுத்தம், மன சோர்வு, பதற்றம் ஆகியவற்றை குறைத்து மனதுக்கு அமைதியை தருகின்றன. தவிர, சிறார்கள் ஓடியாடி விளையாட பூங்காக்கள் போதிய இடவசதியை அளிக்கும். நகரத்தின் வெப்பமான சூழலை தணிக்கும். வெள்ள பாதிப்பை குறைக்கும்.

எனவே, மாநகரத்தின் மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் மிக சிறந்த சுற்றுச்சூழல் பூங்காவை சென்னையின் மத்திய பகுதியான கிண்டியில் அமைப்பது மிக அவசியமானது. இங்கு அமைக்கப்பட உள்ள பூங்கா, மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தை மெருகேற்ற வழிவகுக்கும். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, சென்னையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில்,தனியார் அமைப்புகளிடம் இருந்தஅரசு நிலங்களை மீட்டு, தோட்டக்கலை துறை மூலம் சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவும், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஒரு பூங்காவும் உருவாக்கப்பட்டு வருகிறது. அதேபோல, தற்போது சென்னை கிண்டியில் மிக பெரிய பரப்பளவில் உருவாக்கப்பட உள்ள இந்த பூங்கா,பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக அமையும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE