சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு அமைக்க கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By KU BUREAU

சென்னை: தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு அமைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு, மனித உரிமைகள் ஆணையம், சிறைத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை, வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, தனது வீட்டு வேலைக்காக அழைத்து சென்று பின்னர் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை திருடியதாகக்கூறி அவரை தாக்கி தனிமை சிறையில் அடைத்து சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் விசாரணைகைதிகள், தண்டனை கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிகேரளாவைச் சேர்ந்த அஷ்வின்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தன்னை கோவை சரவணம்பட்டி போலீஸார் கைது செய்து, விசாரணை கைதியாக கடந்தாண்டு ஏப்ரல் முதல் கடந்த ஜூன் மாதம் வரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். வேலூர் சிறையில் விசாரணை கைதிகளை சிறைத்துறை அதிகாரிகள் நிர்வாணமாக்கி, தனிமை சிறையில் அடைத்தும், இருட்டுஅறையில் அடைத்தும் சித்ரவதைசெய்து வருகின்றனர். இதுதொடர்பாக கேள்வி கேட்டால் தண்டனை இன்னும் கொடூரமாக இருக்கும்.சிறைக்குள் நடக்கும் இந்த அத்துமீறல்களால் பல கைதிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் அந்த சம்பவங்களை அதிகாரிகள் வெளியே தெரியாமல் மறைத்து விடுகின்றனர்.

எனவே தமிழகம் முழுவதும் சிறைக்குள் இருக்கும் கைதிகளை அடித்து துன்புறுத்தும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், மாநிலம் முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சிறைகளில் கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு, இதுதொடர்பாக தமிழக அரசு, மாநில மனித உரிமை ஆணையம், சிறைத்துறை அதிகாரிகள் 4 வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE