ஒரு வாரத்தில் மாநாட்டு பணிகள் தொடங்கும்: தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல்

By KU BUREAU

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு தேதி அக்.27-க்கு மாற்றப்பட்டிருக்கும் சூழலில், அதற்கான அனுமதி கோரி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று மனு அளித்தார்.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் செப். 23-ம் தேதி நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. இதற்கு33 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்த நிலையில், மாநாட்டு தேதியை அக். 27-க்குமாற்றி கட்சித் தலைவர் விஜய் இருதினங்களுக்கு முன் அறிவித்தார்.

இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்நேற்று மாலை விழுப்புரம் எஸ்.பி.அலுவலகத்துக்கு வந்து, மாநாட்டுக்கான புதிய தேதியைக் குறிப்பிட்டு, கூடுதல் கண்காணிப்பாளர் திருமாலிடம் புதிதாக மனு அளித்தார். பின்னர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மேடை அமைப்பது, பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது தொடர்பான கேள்விகளுக்கு, எங்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் அறிவித்தபடி வரும் அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறும். மாநாட்டுப் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும். இந்த மாநாட்டில் கலந்து கொள்வோரின் விவரங்களை, தலைவர் விஜய் முறைப்படி அறிவிப்பார்" என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE