திருப்பதிக்கு நெய் அனுப்பிய திண்டுக்கல் பால் நிறுவனத்தில் மத்திய அரசு அதிகாரிகள் சோதனை

By KU BUREAU

திண்டுக்கல்: திருப்பதிக்கு நெய் அனுப்பிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் என்ற பால் நிறுவனத்தில் மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

திருப்பதியில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பது ஆய்வகப் பரிசோதனையில் தெரியவந்தது. திருப்பதி லட்டுக்கு நெய் வழங்கிய 5 நிறுவனங்களில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் என்ற பால் நிறுவனமும் ஒன்று. திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக இந்நிறுவனம் நெய் அனுப்பி வந்துள்ளது. நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையையும் தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டது.

அதில், ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் மூலம் திருப்பதிக்கு அனுப்பிய நெய்யில் 20 சதவீதம் மட்டுமேதரம் இருக்கிறது. மேலும், சோயாபீன்ஸில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தங்கள் தயாரிப்பில் எந்த குறைபாடும் இல்லை. எந்தப் பரிசோதனைக்கும் தயார் என்று ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனம் அறிவித்தது. இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று முன்தினம் அந்நிறுவனத்தில் சோதனைநடத்தினர். தொடர்ந்து, அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரின் மாதிரி எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ரவி தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை திண்டுக்கல் நிறுவனத்துக்கு வந்தனர். அங்கு நெய் மற்றும் பால்பொருட்கள் தயாரிக்கும் இடங்களைப் பார்வையிட்டு, சோதனை நடத்தினர். குறிப்பாக, பாலில் இருந்து எவ்வாறு நெய் பிரித்து எடுக்கப்படுகிறது. அதனுடன் வேறு பொருட்கள் எதுவும் கலக்கப்படுகிறதா என்று நிறுவன அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

மேலும், அங்கு தயாரிக்கப்பட்ட நெய் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகளையும் சேகரித்தனர். ஏறத்தாழ 7 மணி நேரத்துக்கும் மேல் நடத்திய சோதனைக்குப் பின்னர், பால் உள்ளிட்ட பொருட்களின் மாதிரிகளை பகுப்பாய்வுக்கு எடுத்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE