வாழை மரங்களை சாய்க்கும் யானைகள், வாழைக்காய்களை உண்ணும் மான்கள்! -  ஸ்ரீவில்லி. விவசாயிகள் வேதனை

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விளை நிலத்துக்குள் புகும் யானைகள் வாழை மரங்களை சாய்ப்பதாலும், மான்கள் வாழைக்காய்களை உண்பதாலும் விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட செண்பகத்தோப்பு வனப்பகுதியில் வானுயர்ந்த மரங்கள், செடி, கொடிகள் மற்றும் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரும் நீரோடைகள் கொண்ட அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால் யானை, சிறுத்தை, காட்டு மாடு, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட விலங்குகள், பறவைகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியை விட்டு வெளியே வரும் விலங்குகள் மின்வேலி மற்றும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது.

வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தவிர்க்க மலையடிவாரத்தில் அகழிகளும், மலைப்பகுதியில் தண்ணீர் வசதியும் வனத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டது. அவை முறையாக பராமரிக்கப்படாததால், வனவிலங்குள் விளை பயிர்களை சேதப்படுத்துவதும், மின்வேலியில் சிக்கி உயிரிழப்பதும் தொடர் கதையாக உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் - செண்பகத்தோப்பு சாலையில் உள்ள சிங்கம்மாள்புரம் பகுதியில் இரவு நேரத்தில் விவசாய தோட்டத்தின் வேலிகளை சேதப்படுத்தி உள்ள புகுந்த காட்டு யானை கூட்டம் 80 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் கரும்பு பயிர்களை சாய்த்து சேதப்படுத்தி சென்றது. தொடர்ந்து யானை கூட்டம் அப்பகுதியிலேயெ முகாமிட்டு இருந்ததால், வனத்துறையினர் வந்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர். சேதமடைந்த பயிர்களை விஏஓ வேல்ராஜ் மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்து விட்டு சென்றனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள மற்றொரு வாழை தோட்டத்திற்குள் புகுந்த மான்கள் கூட்டம் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை தார்களை உண்டு விட்டு சென்றது. ஒரு புறம் வாழை மரத்தை சாய்க்கும் யானைகள், மறுபுறம் அறுவடைக்கு தயாராக உள்ள வாழை தார்களை உண்ணும் மான்கள் என வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிப்பில் உள்ளனர்.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து இல்லாததாலும், செடி கொடிகள் காய்ந்து உள்ளதாலும் வனவிலங்குகள் உணவுக்காக விளை நிலங்களுக்கு வருவது அதிகரித்துள்ளது. இதை தடுக்க வனப்பகுதியில் விலங்குகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி, அகழிகளை சீரமைக்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE