இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 37 பேர் கைது

By KU BUREAU

சென்னை: தமிழக மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை மற்றும் மயிலாடுதுறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்று, கைது செய்யப்பட்ட 37 பேரும் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் நாகை, மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். 3 விசைப்படகுகளுடன் மீன்பிடித்துக்கொண்டிருந்த 37 மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை கைது செய்தது.

கைதான 37 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் விசாரணைக்குப் பின் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மீனவர்கள் மற்றும் படகுகள் அடிக்கடி கைது செய்யப்படுவது வாடிக்கையாகி உள்ளது. மேலும், கைதான மீனவர்கள் இலங்கை நீதிமன்றம் கோடிக்கணக்கில் அபராதமும் விதித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் பல முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. இந்த சூழலில் மீண்டும் 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE