உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக 5 பேர் நியமனம்

By KU BUREAU

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்துவரும் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக எல்.சி. விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர் கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகிய 5 பேர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் சக நீதிபதிகளான ஜெ.சஞ்ஜிவ் கண்ணா, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் மத்திய அரசுக்கு கடந்த செப்.10-ம் தேதி பரிந்துரை செய்தது.

அதை ஏற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் எல்.சி. விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகிய 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.இதில் எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணிபுரிந்தவர்கள். ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோர் மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி அதன்பிறகு உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள்.

தற்போது நீதிபதிகள் எல்.சி. விக்டோரியா கவுரி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியஇருவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும், மற்ற 3 நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றி வருகின்றனர். விரைவில் இவர்கள் 5 பேருக்கும் பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நிரந்தர நீதிபதிகளாக பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சமீம் அகமதுவை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்தும் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE