தாம்பரம் | சாலையோர தடுப்பில் பைக் மோதிய விபத்து:  கணவன் பலி, மனைவி படுகாயம்

By பெ.ஜேம்ஸ் குமார்

தாம்பரம்: இரும்புலியூர் மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் சாலையோர சிமெண்ட் தடுப்பில் மோதியதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடலூர் மாவட்டம், சொன்னப்ப நாயக்கன் பாளையம், எடையார் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார்(40) - குணசுந்தரி (32) தம்பதி. இவர்கள் இருவரும் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சுமார் 1 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்னை மண்ணடியில் இருந்து கடலூருக்கு மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்றனர்.

அப்போது தாம்பரம், இரும்புலியூர் பாலத்தின் மேல் அதிவேகமாக சென்றபோது இருசக்கர வாகனம் சாலையின் இடது பக்கத்தில் இருந்த சிமெண்ட் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், விஜயகுமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த குணசுந்தரி அங்கிருந்து மீட்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்துக் குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விஜயகுமாரின் உடலை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE