இரு அமைச்சர்கள் மீதான வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

By KU BUREAU

சென்னை: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் அரசுத் தரப்பில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006 - 2011-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76 லட்சத்து 40,433 அளவுக்கு சொத்துக் குவிப்பி்ல் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி மணிமேகலை மீதும் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதேபோல தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோர் ரூ. 44 லட்சத்து 56,067அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அதே ஆண்டில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து விடுவித்து தீர்ப்பளித்தது. இதை மறுஆய்வு செய்யும்விதமாக சென்னை உயர் நீதிமன்றநீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்தார். அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை மறுவிசாரணை நடத்த வில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

மேலும் விசாரணைக்காக அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை பெற்றனர். இந்நிலையில் அமைச்சர்கள் இருவருக்கும் எதிரான இந்த வழக்குகளில் அரசுத்தரப்பில் ஆஜராக சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கக் கோரி வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், சொத்து குவிப்பு வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற புலன் விசாரணை அதிகாரியும், அரசுத்தரப்பு வழக்கறிஞர்களும் எந்த அரசியல் சார்பும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுபவர்களாக இருக்க வேண்டும். அதனால் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதிடி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதிபி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக 4 வார காலத்தில் தமிழக அரசும் அமைச்சர்கள் தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE