இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களுக்கு ரூ.1 கோடி அபராதம்

By KU BUREAU

கோவில்பட்டி / ராமேசுவரம்: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த ஆர்.அந்தோணிமகாராஜா(45) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், அவர்உட்பட 12 மீனவர்கள் கடந்த ஜூலை 21-ம் தேதியும், ஜெ.அந்தோணி தென்டேனிலா (23) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடந்த ஜூலை23-ம் தேதியும் தருவைகுளத்தில்இருந்து மீன் பிடிக்கச் சென்றனர்.

கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அவற்றில் இருந்த 22 மீனவர்களைக் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு இலங்கை புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த 3-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, அந்தோணி மகாராஜா படகில் இருந்த 12 மீனவர்களுக்கும் தலா ரூ.42 லட்சம் (இலங்கை பணம் ரூ.1.5 கோடி) வீதம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல, அந்தோணி தென்டேனிலா படகில் சென்ற 10 மீனவர்களுக்கு இந்திய பண மதிப்பில் ரூ.1 கோடி (இலங்கை பணம் மதிப்புரூ.3.5 கோடி) அபராதம் விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

35 மீனவர்களுக்கு அபராதம்: பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்ட்டின் ஆகியோரது 4 நாட்டுப் படகுகளை ஆக. 8-ம் தேதிகைப்பற்றிய இலங்கை கடற்படையினர், அவற்றிலிருந்த 35 மீனவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 35 மீனவர்களும் புத்தளம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி விமலரத்னா, நீளமான ஒரு நாட்டுப் படகிலிருந்த 12 மீனவர்களுக்கு இலங்கை பணம் தலா ரூ.35 லட்சம் அபராதமும், மற்ற 3 நாட்டுப் படகுகளில் இருந்த 23 மீனவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தார்.

பழனிசாமி வலியுறுத்தல்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், "இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அதிகஅளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இலங்கையின் அத்துமீறல்களை இனியும் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்க்காமல், அபராதம் மற்றும் தண்டனைகளை ரத்து செய்வதுடன், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE