மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் கிடந்த முதலை: 35 மணி நேரம் போராடி பிடித்தது வனத்துறை!

By இல.ராஜகோபால்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராம குட்டையில் இருந்த முதலையை வனத்துறையினர் நீண்ட போராட்டத்துக்கு பின் இன்று பிடித்து சென்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை இருப்பதாக பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் குட்டையில் முதலை இருப்பதை வனத் துறையினர் உறுதி செய்தனர். குட்டையில் பத்து அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால் அவற்றை அப்புறப்படுத்திய பின் முதலையை பிடிக்க திட்டமிடப்பட்டது. நேற்று காலை 11 மணி முதல் தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கியது.

இன்று பிற்பகல் 3 மணியளவில் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு தண்ணீருக்குள் இருந்த முதலையை வனத்துறையினர் பிடிக்கும் பணியை தொடங்கினர். நகர்ந்து கொண்டே இருந்த முதலையை கயிற்றில் சுருக்கு வைத்து தண்ணீரில் இருந்து வெளியே எடுத்தனர். பரிசோதனை மேற்கொண்டதில் உடல் ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து முதலையை பவானிசாகர் அணைப் பகுதிக்கு வனத்துறையினர் எடுத்து சென்றனர்.

35 மணி நேரம் போராட்டத்துக்கு பின் குடியிருப்பு அருகே உள்ள குட்டையில் இருந்த முதலை மீட்கப்பட்டது. இதற்கு வனத்துறையினருக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE