‘ஓசோன் படலத்தை பாதுகாக்க வேண்டும்’ - நீலகிரி பந்தலூர் பஜாரில் விழிப்புணர்வு நடைபயணம்! 

By ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி: பந்தலூர் பஜாரில் ஓசோன் படலத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நடை பயணம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு வனத்துறை தேவாலா வனச்சரகம், நெல்லியாளம் நகராட்சி, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன் ஆகிய அமைப்புகள் சார்பில் சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு துய்மையே சேவை மற்றும் ஓசோன் விழிப்புணர்வு நடைபயணம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் முனியப்பன் தலைமை தாங்கினார். ஆல் தி சில்ரன் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், மகாத்மா காந்தி பொது சேவை மையம் தலைவர் நௌஸாத், நகராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர் கார்த்திக், நூலகர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஓசோன் பாதுகாப்பு குறித்து தேவாலா வனசரகர் சஞ்சீவி, பேசும் போது, ''மரக்கன்றுகள் அதிக அளவு நாட்டு வளர்க்கும்போது பூமி வெப்பமடைவதை தடுக்க முடியும். காலநிலை மாற்றத்தை தவிர்க்கவும், வறட்சியை போக்கவும் மரங்களால் மட்டுமே முடியும். இயற்கையை பாதுகாக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். ஓசோன் பாதுகாப்பு என்பது மக்களின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம். இயற்கையை பாதுகாக்க வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அனைவரும் பயன்படுத்தி மரங்களை அதிகமாக வளர்க்க வேண்டும்'' என்றார்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது, ''ஓசோன் படலம் புற ஊதாக் கதிர்களை நேரடியாக பூமிக்கு வராமல் தடுக்கிறது. தொழிற்சாலை மற்றும் வாகன பயன்பாடு மூலம் வெளியேறும் கார்பன்டை ஆக்சைடு, ஃபிரிட்ஜ் ஏசி போன்றவற்றில் இருந்து வரும் குளோரா புளோரா கார்பன் உள்ளிட்டவை ஓசோன் படலத்தை சேதப்படுத்துகின்றன. இதனால் பூமி வெப்பமடைகிறது. மேலும், கண்புரை, தோல் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ஒவ்வொரு மனிதரும் முன்வரவேண்டும்'' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தூய்மை நகரம் மற்றும் ஓசோன் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமி விழிப்புணர்வு நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பந்தலூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய நடைபயணம் பந்தலூர் பஜார் வழியாக பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியை அடைந்தது.

நடைபயணத்தில் நகராட்சி கவுன்சிலர்கள், பள்ளி மாணவ - மாணவியர், வனத்துறையினர், நெல்லியாளம் நகராட்சி பணியாளர்கள், நுகர்வோர் மைய உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஓசோன் படலம் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கபட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE