கருணாநிதி இருந்திருந்தால் வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு அளித்திருப்பார்: அன்புமணி கருத்து

By KU BUREAU

விழுப்புரம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி தற்போது இருந்திருந்தால் வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கியிருப்பார் என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார்.

வன்னிய சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி 1987-ல் நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோருக்கான நினைவஞ்சலி நிகழ்ச்சி தைலாபுரம் தோட்டத்தில் நேற்று நடைபெற்றது. உயிரிழந்தோர் படங்களுக்கு பாமகநிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, சிவகுமார் எம்எல்ஏ, வழக்கறிஞர் பாலு, பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது: சாதிவாரி கணக்கெடுப்புக்காக 45 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது. இந்தக் கணக்கெடுப்பு நடத்த ஊராட்சித் தலைவருக்கு கூட அதிகாரம்உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடுகொடுத்திருப்பார். தியாகிகள் தினத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று முதல்வருக்கு மீண்டும் கோரிக்கை வைக்கிறோம்.

தமிழக அரசில் உள்ள 53 துறைகளில் ஒரு செயலாளர்கூட வன்னியர் கிடையாது. அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் கிடையாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று பெரியார் பிறந்த நாளில்முதல்வர் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறினார். ஜெகத்ரட்சகனுக்கு `கலைஞர் விருது' அறிவிக்கப்பட்டுள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “டாஸ்மாக்கில் அதிக வருவாய் ஈட்டியதற்காக, அவருக்குஅந்த விருது அளிக்கப்பட்டிருக்கலாம்” என்று கிண்டலாகத் தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE