வாராணசியில் சர்வ சேவா சங்கக் கட்டிடம் இடிப்பு விவகாரம்: போராட்டத்தில் சிதம்பரம் காந்தி மன்றமும் பங்கேற்க முடிவு 

By க. ரமேஷ்

கடலூர்: உத்தரப்பிரதேசம் மாநிலம் வாராணசியில் சர்வ சேவா சங்கக் கட்டிடம் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சிதம்பரம் காந்தி மன்றம், மாற்று இடம் கோரி காந்திய தலைவர்கள் நடத்தும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்கவும் முடிவு செய்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வாகீச நகரில் உள்ள காந்தி மன்ற வளாகத்தில் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று (செப்.12) மதியம் நடைபெற்றது. மன்றத் தலைவர் மு. ஞானம் தலைமை வகித்தார். மன்ற உறுப்பினர்கள் அ.லக்குமணன், வனஜா தில்லைநாயகம், தமிழரசி சேகர், சீனுவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

இதில், 'வாராணசியில் 1948-ம் ஆண்டு ரயில்வே துறையிடம் இருந்து கிரயம் பெற்ற இடத்தில் இயங்கி வந்த பழமை வாய்ந்த சர்வ சேவா சங்கக் கட்டிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடித்து அகற்றப்பட்டது. அந்த கட்டிடத்தில் இருந்த காந்திய புத்தகங்கள், அரிய பொக்கிஷங்கள் வெளியே வீசப்பட்டன. அந்த இடம் மீண்டும் ரயில்வேத் துறைக்கு வேண்டும் என்றால் உரிய இழப்பீடும், மாற்று இடமும் வழங்கிவிட்டு கட்டிடடத்தை அகற்றி இருக்க வேண்டும்.

அப்படிச் செய்யாமல் கட்டிடத்தை இடித்தது கண்டனத்துக்குரியது. மாற்று இடம் வேண்டி பல்வேறு அறவழிப் போராட்டங்கள் நடத்திய போதிலும் கடந்த ஓராண்டாக உத்தரப் பிரதேச அரசு சார்பில் எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. எனவே, அகில இந்திய காந்தியத் தலைவர்கள் இடிக்கப்பட்டக் கட்டிடம் அருகே 100 நாள் சத்தியாகிரகப் போராட்டத்தை வினோபாஜி பிறந்த நாளான செப்டம்பர் 11-ம் தேதி முதல் தொடங்கி உள்ளனர்.

இந்த சத்தியாகிரகப் போராட்டத்திற்கு சிதம்பரம் காந்தி மன்றம் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதற்கு விரைவில் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனில் சிதம்பரம் காந்தி மன்றம் உறுப்பினர்கள் வாராணசி சென்று 100 நாள் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்பார்கள்' எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE