இமானுவேல் சேகரன் நினைவுநாள் நிகழ்ச்சி: மாவட்ட எல்லையில் போலீஸார் தீவிர வாகன சோதனை

By இ.மணிகண்டன்

விருதுநகர்: இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் இன்று போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, மாவட்ட எல்லைப் பகுதியில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டத்தப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியில் இமானுவேல் சேகரன் நினைவுநாள் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. அதையொட்டி, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் வாகனங்களில் பரமகுடி புறப்பட்டுச் செல்கின்றனர். இமானுவேல் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு செல்வோர் சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும், குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். மேலும், காவல்துறையால் வழக்கப்படும் அனுமதி அட்டை பெற்ற பின்னரே செல்ல வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அசம்பாவிதங்களைத் தடுக்கவும், வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் விருதுநகர் மாவட்ட எல்லைப் பகுதியில் மதுரை- தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தின் பல்வேறு வழியாக இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் போலீஸார் நிறுத்தி தீவிர சோதனை நடத்திய பின்னரே பரமகுடி செல்ல அனுமதித்தனர். மேலும், வாகனத்தின் பதிவெண், வாகன உரிமையாளர் பெயர், வாகனத்திற்கான ஆவணங்கள், நபர்களின் எண்ணிக்கை, பெறப்பட்டுள்ள அனுமதி அட்டை போன்றவைகளை சரிபார்த்த பரமகுடி நோக்கிச் செல்லும் வாகனங்களை போலீஸார் அனுமதித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE