பூனை குறுக்கே வந்ததால் விபத்து: கணவருடன் புல்லட்டில் சென்ற மனைவி கீழே விழுந்து உயிரிழப்பு

By பெ.ஜேம்ஸ் குமார்

மாம்பாக்கம்: கணவருடன் புல்லட்டில் பின்னால் அமர்ந்து சென்ற மனைவி, பூனை குறுக்கே வந்ததால், கணவர் பிரேக் அடித்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

வண்டலூர் அருகே மாம்பாக்கம், கண்ணன்புரம், அருண் எக்சல் குடியிருப்பை சேர்ந்த ஓட்டுநர் சபரி ராஜன் (45). இவரது மனைவி நாகரத்தினம் (39). இவர் ஹவுஸ் கீப்பிங் பணியை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், நாகரத்தினம் நேற்று இரவு 10 மணியளவில் மேடவாக்கத்தில் சுப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தன் கணவர் சபரிராஜனுடன் அவரது புல்லட் பைக்கில் பின்னால் அமர்ந்து வீட்டுக்குச் சென்றார்.

அப்போது மாம்பாக்கம் பிரதான சாலை, சித்தாலப்பாக்கம் ஏரி அருகே ஒரு பூனை வேகமாக சாலையின் குறுக்கே சென்றது. இதில், நிலைத்தடுமாறிய சபரிராஜன், திடீரென பிரேக் அடித்துள்ளார். இதில் பின்னால் அமர்ந்திருந்த மனைவி நாகரத்தினம் நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். இச் சம்பவத்தில் நாகரத்தினத்தின் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார் சபரிராஜன்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், நாகரத்தினம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது. சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE